சென்னை:  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போதை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில்,  விருகம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் கால்வாய்கள் அருகே மற்றும் குடிசை பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பெண்கள் கூட போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் தங்களது பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், சென்னையில்   மெத்த பெட்டமைன் எனப்படும் போதை விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கே கே நகர் பகுதியில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த யோகா மாஸ்டர் ராஜேஷ், வங்கி ஊழியர் சாய் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சென்னையில் விற்பனை செய்வதற்காக பெங்களூரை சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து, மெத்த பெட்டமைன்வாங்கி வருவதாக தகவல் தெரிவித்தனர்.

இருவரும் அளித்த தகவல் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த அருண்குமார், ரிஸ்வான், ஷாரூக், சையது, நிதின் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து கார், செல்போன்கள், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள், ரூ.20000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.