வேலூர்:
மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரியை தொடர்ந்து மேகதாது அணை பிரச்சினையும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்துள்ளது. அங்கு தற்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவோம் என்று கூறி வெற்றிபெற்ற நிலையில், ஆட்சியை கைப்பற்றியதும், மேகதாது அணை கட்டுவோம் என கூறி வருகிறது. சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணைமுதல்வரான டி.கே.சிவகுமார், அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் என்றும், அண்டை மாநிலங்களை வாழ விடுங்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது கர்நாடகாவின் ஆசை மட்டுமே; ஆனால் அவர்களுக்கு உரிமை இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதே சமயம் அணையை கட்டக்கூடாது என கூறுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.