சென்னை:
பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

இன்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் என பலரை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது மூன்றாவது டெல்லி பயணம் இது. இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்தேன்.

சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது உடனடியாக அதற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமரிடம் வழங்கினேன். அந்தக் கோரிக்கையில் உள்ள முக்கியத்துவத்தை பிரதமரிடம் தெளிவாக எடுத்துக் கூறினேன்.

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் உறுதியளித்தற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நன்றி இந்த ஊடகங்கள் மூலமாக அவருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

அதேபோல இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை பிரதமரிடம் அழுத்தமாக முன்வைத்தேன்.

அமைச்சர்கள் அனைவருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பாக தமிழகத்தில் அதிகத் திட்டம், பாதுகாப்புத்துறை தொழிற்சாலை அமைக்க தமிழகம் உகந்த இடம் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக தெரிவித்தார்.