சென்னை:
திமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடலாம் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிடம் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து அக்கட்சியில் இருந்து 1993ஆம் ஆண்டு விலகி, 1994ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்த வைகோ, 1999ஆம் ஆண்டு திமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, திமுக கூட்டணியில் மதிமுக பயணம் செய்து வருகிறது. வைகோவின் மகன் துரை வைகோவிற்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கொடுத்தது முதல் மதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மதிமுகவை சேர்ந்த அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் வைகோவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை காட்டுகிறது. முன்பு கிளைக்கழக உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும் என்ற விதியையே 10 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று மாற்றியிருப்பது கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா அல்லது தற்போது மதிமுகவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை தங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். உங்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்து கொண்டவர்களையும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும், ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கட்சியில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும், மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வே. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பதன் விளக்கமா என்பதை தங்களின் மனசாட்சியிடம் தாங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கழகத்தை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.