பெங்களூரு:

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஷ்மீர் மாநில புல்வாமா குண்டு வெடிப்பில், 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயரிழந்துள்ள நிலையில், கர்நாடகாவை சேர்ந்த குரு என்ற வீரரும் வீர மரணம் அடைந்துள்ளார்.

குரு இன்னும் சில மாதங்களில் விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு முறையில், பணியில் இருந்து விலக நினைத்திருந்த வேளையில் இந்த கொடூரமான குண்டுவெடிப்பில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் குடிகெரே பகுதியை சேர்ந்தவர் குரு. தற்போது 33 வயதாகும் அவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவரது மரணம் கேட்டு அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று விரைவில் விஆர்எஸ் வாங்க குரு நினைத்திருந்தாக அவரது  பெற்றோர்கள்  தெரிவித்து உள்ளனர். குருவின் தந்தை பெயர் கொன்னையா என்றும் தாயார் பெயர் சிக்கோலமா. இவருக்கு மனைவி கலாவதி மற்றும்  ஆனந்த், மது என இரு சகோதரர்களும் உள்ளனர். குருதான் குடும்பத்தின் மூத்தவர். கடந்த 2011ம் ஆண்டு முதல்  சிஆர்பிஎப் பணியில் சேர்ந்து பணி செய்து வருகிறார்.

இவரது மரணம் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குருவின் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் குமாரசாமி, குருவின் மனைவி கலாவதிக்கு அரசு பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கலாவதியின் படிப்புக்கு ஏற்ற வகையில் மான்டியா மாநிலத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், அதற்கு தேவையான தகவல்களை சேகரிக்கப்படும் மாவட்ட நிர்வாகத்தக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.