தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் தங்கத்தைக் கைப்பற்றினார்.

கத்தார் நாட்டில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஏர் பிஸ்டல் 10மீ. பிரிவில், இந்தியாவின் மனு பாகர் மற்றும் யாஷஸ்வினி ஆகிய இரு வீராங்கணைகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இறுதிச் சுற்றி மனு பாகர் பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 244.3. இதன்மூலம் தங்கப்பதக்கம் அவர் வசமானது. அவருக்கு கடும் போட்டியாக இருந்த சீனாவின் கியான் 242.8 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.

இறுதிப்போட்டியின் முதல் எலிமினேட்டர் சுற்றில் சக இந்திய வீராங்கணை யாஷஸ்வினி வெளியேறியதால், பதக்க வாய்ப்பு பறிபோனது. அவர் பெற்ற புள்ளிகள் வெறும் 157.4 மட்டுமே.

இதேசமயம், ஆண்களுக்கான 10மீ. ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் ரவிக்குமார், மொத்தம் 227.8 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார்.