இம்பால்

மணிப்பூர் மாநில அரசு ராகுல்  காந்தியின்  பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது.

‘பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். ராகுலின் இந்த பாத யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, கட்சிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்தது.

பாத யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். வரும் 14 ஆம்  மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்க உள்ளார்.

தற்போது  இநத யாத்திரைக்கு ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைப்பயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ராகுல் காந்தியின் யாத்திரையைத் தொடங்குவதற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் கேஷ்யாம் மேகசந்திரா செய்தியாளர்களிடம்,

” முதல்வர் பைரன் சிங்கை நாங்கள் சந்தித்து, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா காங்ஜெய்பங் பகுதியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையைத் தொடங்குவதற்கு அனுமதி கோரினோம். அவர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். மணிப்பூர் மாநில அரசின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் மக்களின் உரிமையை மீறும் செயலாகும்.

என்று கூறினார்.

தற்போது மணிப்பூர் மாநில அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது.  குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுடன் மட்டுமே யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது.