“குதிரை பேர’’ பா.ஜ.க. அரசுக்குக் குழி பறித்த எம்.எல்.ஏ,க்கள்..

கடந்த 2017 ஆண்டு 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனினும் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது.

ஆனால் 21 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்த பா.ஜ.க. ‘குதிரை பேரம்’’ நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்தது.

வரலாறு இப்போது திரும்பியுள்ளது.

மணிப்பூர் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி விட்டனர். பா.ஜ.க.அரசுக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெற்றுள்ளனர்.

அடுத்து இன்னொரு சம்மட்டி அடியாக, பா.ஜ.க.அரசை ஆதரித்த தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரும், அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டனர்.( இவர்களில்  மூவர் அமைச்சர்கள்)

மேலும், திருனாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும்,சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் பா.ஜ.க.அரசுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

அதாவது நேற்று ஒரே நாளில் மணிப்பூர் பா.ஜ.க.அரசுக்கு அளித்த ஆதரவை 9 எம்.எல்.ஏ.க்கள் விலக்கி கொண்டு உள்ளனர்.

அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த பிரேன்சிங் முதல்-அமைச்சராக இருக்கிறார்.

9 எம்.எல்.ஏ.க்களின் அதிரடி முடிவால் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

–பா.பாரதி