போதைப்பாக்கு வாங்க  ஆளில்லா விமானம்..


’பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்.

பணம் வைத்துள்ள பணக்காரன், பத்து என்ன ? நூறு, ஆயிரம் என எதையும் செய்வான்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த ரவி என்ற பணக்கார இளைஞனுக்கு போதைப்பாக்கு (பான்) பழக்கம் உண்டு.

ஊரடங்கு காரணமாக ’பான்’ கிடைக்காமல் நரம்பு தளர்ந்து போனது.

என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அவனிடம் சொந்தமாக ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) உள்ளது.

ரவியின் வீட்டுக்குப் பக்கத்தில், அவனது நண்பன் ஹிரேன் என்பவன் பீடாக்கடை வைத்துள்ளான். பான் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் அங்கு ரகசியமாக விற்பனை செய்யப்பட்டது.

ஊரடங்கால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்த ரவி, தனது ட்ரோனை, அந்த கடைக்கு அனுப்பினான்.

அதில் ஹிரேன்,  ’பான்’ பாக்கெட்டுகளை ’ சொருகி அனுப்ப- தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து ’பானை’ பெற்றுக்கொண்டான், ரவி.

இந்த ஆகாய பரிமாற்றத்தை வீடியோவில் வெளியிட்டு- ரவி, தம்பட்டம் அடித்துக்கொண்டான்.
அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது

விளைவு, வாங்கியவரையும் விற்றவரையும் போலீசார் அள்ளிக்கொண்டுபோய் சிறையில் அடைத்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்,