திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு இன்று  மதியம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் பாஸ்கர் என்ற நபர் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் பரிசோதனை செய்த போது, பாஸ்கர் என்று சொன்ன நபருக்கும் அடையாள அட்டை மற்றும் தேர்வு அறை நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்து தேர்வு நடத்தும் அலுவலருக்கு கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் என்பதும், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்காக திவாகரன் தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இந்த ஆள்மாறாட்ட சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசாருக்கு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வு நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.