கொல்கத்தா
மம்தா பானர்ஜி தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது எனவும் முடிந்தால் இணைப்பை துண்டிக்கட்டும் என சவால் விட்டுள்ளார்.
சமீபத்தில் அரசு அனைத்து மொபைல் எண்ணுடனும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் கார்டுதாரர் சொந்த விவரங்கள் திருடப்படலாம் என ஒரு தகவல் வந்தது. ஆனால் பாராளுமன்ற கமிட்டிக்கு அரசு அளித்த தகவல் ஒன்றின் மூலம் ஆதார் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாது எனவும், புகைப்படம் மட்டுமே தெரியும் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆதார் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சித்தலைவர்களில் ஒருவரான மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் மிகவும் தலையிடுகிறது. ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை தான். நான் எனது மொபைல் எண்ணுடன் ஒருபோதும் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன். அவர்கள் வேண்டுமானால் எனது மொபைல் சேவையை துண்டித்துக் கொள்ளட்டும்.
நவம்பர் மாதம் 8 ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளது. அதற்கு திருணாமுல் காங்கிரஸ் தனது முழு ஆதரவை அளிக்கிறது. அதையொட்டி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் திரளாக கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.