சென்னை

மலேசியாவின் ஓட்டல் அதிபர் ஒருவர் ரெயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்து சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஒரு ஓட்டலின் அதிராக உள்ளவர் ஆவார். இவர் அடிக்கடி இந்தியாவுக்கு வருவது வழக்கம். இவருடைய முதல் மனைவியை இவர் விவாகரத்து செய்துள்ளார். அவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவி மற்றும் இரு மகன்கல் இதே ஓட்டலின் அதிபர்கள் ஆவார்கள்.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று இவர் மதிப்பான உடைகள் அணிந்து  சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் காரணமின்றி சுற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை சென்னை செண்டிரல் ரெயில்வே காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அவருடைய பொருட்களை சோதனை இட்டபோது அவரிடம் ஒரு லாப்டாப் கிடைத்தது. அதில் தேதி வாரியாக ஒரு பட்டியலை பதிந்திருதார்.

இது குறித்து விசாரித்த போது அவர் தம்மைப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். அவர் இந்தியா வரும் போது சென்னையில் இருந்து கேரளா செல்லும் இரவு நேர ரெயில்களில் ஏசி மற்றும் சாதாரண வகுப்பு டிக்கட்டுகள் இரண்டையும் வாங்கி பயணம் செய்வது வழக்கமாகும். இவர் ரெயில் கிளம்பும் ஒரு மணி நேரம் முன்பே வந்து ஏசி வகுப்பில் தனியாக செல்லும் பெண்களை குறி வைப்பார்.

நள்ளிரவு நேரத்தில் அவர்களின் பைகளில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி விட்டு அதே இடத்தில் பையை வைத்து விடுவார். இதனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் உடமைகளை பறி கொடுத்ததே தெரியாமல் பயணம் செய்வார்கள். இவர் தான் திருடிய பொருட்கள் குறித்த விவரங்களை லாப்டாப்பில் பட்டியலாக பதிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணையில் சாகுல் ஹமீது சுமார் 29 பேரிடம் இது போல் கொள்ளை அடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவரை நேற்று கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் இருந்து ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 110 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. இவைகளை அவர் திருச்சூர் மற்றும் மும்பை அடகு கடைகளில் அடகு வைத்திருந்தார்.

ஷாகுல் ஹமீது ஆறு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர் ஆவார். இவர் 11 நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து வருவது வழக்கமாகும். தனது ஓட்டலில் அடிக்கடி ஃபேஷன் ஷோ நடத்துவதாக கூறி இவர் அல்ஜீரியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் இருந்து அழகிகளை அழைத்து வருவார். அதன் பிறகு அவர்களை மலேசிய பணக்காரர்களுக்கு பாதுகாவலர் என்னும் பெயரில் தவறான தொழிலுக்கு அனுப்பி வந்துள்ளார்.