கவுகாத்தி,
அசாமில் முதல்வராக சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த மாநில எம்.பி.யாக இருப்பவர் கமாக்யா பிரசாத் டாஸ்சா.
இவர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்பேசும்போது, தேசத்தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவை குப்பைகள் என்று விளித்து பேசினார். இது பொதுமக்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ.க எம்.பி.யான கமாஹ்யா பிரசாத் டாஸ்சா, “தீன்தள் உபாத்யாவின் சிந்தாந்தங்கள் காங்கிரசுக்கு தெரியவில்லை. அது மக்களின் மூளையை காந்தி மற்றும் நேரு போன்ற குப்பைகளை கொண்டு சலவை செய்கிறது” என்று தேசத்தலைவர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் பேசியுள்ளார்.
அவரது பேச்சு கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது, மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலும் உடனிருந்தார்.
இந்நிலையில் டாஸ்சாவின் அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போது டெஸ்சா எம்.பி.யின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டது.
மேலும், எம்.பி.யின் அநாகரிக பேச்சு குறித்து போலீசிலும் புகார் கூறப்பட்டுள்து. அவரை கைது செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரிபன் போரா தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்சாவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜ எம்.பி. ஒருவர் நாடு விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களை அவமரியாதை செய்து, அவர்களை குப்பைகள் என்று கூறியது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
பாரதியஜனதா தலைமை அவர்மீது உடடினயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி வருகின்றனர்.