டெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் உள்ள சிவசேனாவின் எம்எல்ஏக்களை பதவி தகுதி நீக்கம் செய்யும் சிவசேனா கட்சியின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது.  ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க ஜூலை 11-ம் தேதிவரை அவகாசம் வழங்கி உள்ளது. இதனால் அவர்கள் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக்கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதன்படி, ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு துணை சபாநாயகர் நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.  ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதி மன்றம் இன்று விசாரணை நடத்தியது.

அதன்படி, மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு, சிவசேனா சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அனில் சவுத்ரி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், மகாராஷ்டிர துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்ஸுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஜூலை 11 மாலை வரை காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷிண்டே தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘‘மகாராஷ்டிர மாநில மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. சிவசேனா கட்சியை சேர்ந்த 38 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்ப்பெற்று இருப்பதால், சட்டப்பேரவையில் மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. அதுபோலவே சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக அஜய் சவுத்ரி நியமனமும் செல்லாது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து  நீதிபதிகள் கூறுகையில் ‘‘அனைத்து தரப்பினரும் ஐந்து நாட்களுக்குள் எதிர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். எதிர் வாக்குமூலங்களுக்கு பதிலளிக்க ஷிண்டே முகாமுக்கு மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 11ம் தேதி நடைபெறும்.

மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தகுதிநீக்க விவகாரத்தில் துணை சபாநாயகர் அவசரமாக செயல்படுவது விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்’’ எனக் கூறினர்.