‘ஓம் நமசிவாய’  

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வழக்கமாக  சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அன்றைய நாளுக்கு  கூடுதல் மகத்துவம் உண்டு. அந்தத் திருநாளையே இந்துக்கள்   மஹா சிவராத்திரி என்ற புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறார்கள்…

ஒவ்வொரு வருடமும் எத்தனையோ ராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்று முழுவதும் ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் ஆன்மிக வாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

சிவராத்திரி அன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான  ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்தை பெறலாம் என்பது ஐதிகம்

 `சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.  சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி’ என்று கூறியுள்ளார்கள் ஆன்றோர்கள்….

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.

மஹா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும் மகிழ்ச்சியும் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது.

மஹாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து விட்டு மறுநாள் வரை ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து சிவனை வழிபடவேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம்.

பால், பழம் மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து நாள் முழுவதும் இருக்கலாம். பால், தயிர், நெய் தேன் போன்ற பூஜை பொருட்களைக் கொடுத்து வழிபடலாம்.

நான்கு வேளை பூஜைகளில் இரவு 11.30 முதல் 1 மணி வரையிலான சிவ பூஜையே சிறப்பு வாய்ந்தது. 

மஹா சிவராத்திரி பூஜை நேரம்

சதுர்தேசி திதி தொடங்கும் நேரம் : மாலை 4:28, மார்ச் 4, 2019

சதுர்தேசி திதி முடியும் நேரம் : இரவு 7.07, மார்ச் 5, 2019

நிஷ்ட கால பூஜை நேரம் : அதிகாலை 12:18 முதல் 1:07 வரை

முதல் பிரகார பூஜை நேரம் : மாலை 6:31 முதல் 9:37வரை

இரண்டாம் பிரகார பூஜை நேரம் : இரவு 9:37 முதல் 12:43 வரை

மூன்றாவது பிரகார பூஜை நேரம் : 12:43 முதல் 3:48 வரை

நான்காவது பிரகார பூஜை நேரம் : அதிகாலை 3:48 முதல் 6:54 வரை

அம்பாளின்   வழிபாட்டுக்கு உகந்தவை நவராத்திரிகள் என்றால், அரனாருக்கு உகந்தது ஒரு ராத்திரி, அதுவே  சிவராத்திரி. மகிமைகள் பல கொண்டது சிவராத்திரி..

ஒவ்வொருவரும் சிவராத்திரி விரதம் இருந்து சிவனின் அருளு பெறுவோம்…

ஓம் நமச்சிவாய…. சிவாய நம…