சென்னை

துரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ஆவார்.   இவர் பெரிய எழுத்தாளரும் ஆவார்.  இவர் எழுதிய காவல் கோட்டம் என்னும் நூல் 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.  இந்த நூல் வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் என்னும் தமிழ் திரைப்படமாகவும் வெளியானது.

வெங்கடேசன்  தனது டிவிட்டரில்,

“ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், தத்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும்.

திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்குத் தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதமர் வைத்த பெயர் அது. அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதைச் சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் 14,135 பேர்தான்.

தமிழ் 8 கோடி பேரின் தாய் மொழி. மத்திய அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14,000 பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும். ஆனால் இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதைக் கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்.”

எனக் குறிப்பிட்டுள்ளார்.