மதுரை,

மிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோவின் காலவரையற்ற போராட்டம் கடந்த 7ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கோர்ட்டு, அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தது.

இந்நிலையில், தடையை மீறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் 15ந்தேதி ஜாக்டோ, ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்தது.

இதற்கிடையில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கால வரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறது.

அவர்களின் போராட்டத்துக்கு நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில்,  பணிக்கு செல்லாமல் அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜாக்டோ, ஜியோ  அமைப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றக் கிளை அனுமதித்தது. வழக்கறிஞர் சேகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் 15-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.