சென்னை:  நீட் தேர்வு அன்று ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏவுக்கு  தடை விதித்து  உத்தரவிட்டது.

தேர்வு என்று சென்னை ஆவடியில்  ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் உளள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ந மற்றும் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இந்த நுழைவு தேர்வு தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும்  நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு, பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டு, மே 4ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு  தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.   நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என என்டிஏ ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு நடைபெற்ற மே 4ந்தேதி அன்று ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில்  நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்தடையால், சில மாணவர்கள், தேர்வை முழுமையாக எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும், தங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி,  திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.  அவர்களது  மனுவில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் தேதி மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.

தேர்வு மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை என்றாலும், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக 11 மணிக்கு தேர்வு மையத்தின் வளாகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. அனைத்து சோதனைகளுக்கு பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

தேர்வு மையத்தில்,  தற்காலிக மின் சேவைக்காக எந்த சாதனங்களும் மையத்தில் செய்யப்படவில்லை. குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் தேர்வு எழுத அறவுறுத்தப்பட்டதால் மேலும் சிரமம் ஏற்பட்டது. கடுமையான சிரமத்திற்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்கள், கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தேர்வு மைய அதிகாரியிடம் கோரிக்கை வைத்தும் அதனை அவர்கள் நிராகரித்தனர். அதனால், முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை.

தேர்வுக்கு பின், மின் தடை காரணமாக சரியாக தேர்வு எழுத முடியவில்லை என இணையதளம் மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலருடைய கனவான மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் ஏற்படும் சிறு குறைபாடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மின் தடை காரணமாக, மன அழுத்தம், புழுக்கம் காரணமாக சரியாக தேர்வு எழுத முடியவில்லை. மறுதேர்வு நடத்த வேண்டும் என பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நியாயமான வாய்ப்பு  தங்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மேலும்,   மாணவர்களின் எதிர்கால மருத்துவக் கனவு வீணாகிறது. அதனால், வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும். மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பது குறித்துப் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனத் தடை விதித்து விசாரணையை ஜூன் 2-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.