மத்திய பிரதேச மாநிலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக இஸ்லாமியர் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது அம்பலமாகி உள்ளது.

கடந்த ஜூன் 18ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே “பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்!” என ஆங்கில ஊடகத்தை சேர்ந்த பிரபல நெறியாளர் ஒருவர் தனது நிகழ்ச்சியில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு பதிலடி தரும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவுகளை எழுதி வந்தனர்.  “விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதனை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்துவது தவறு!” என்று பல்வேறு தரப்பினரும்  தெரிவித்தனர்.

இதற்கிடையே  மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாக ஜூன் 20ம் தேதி 15 இஸ்லாமியர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த 15 பேரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியதாகவும், இனிப்புகள் வழங்கி கொண்டாடியதாகவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்..

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுபாஷ் என்பவர்  ஷாபுரா காவல்நிலையத்திற்கு தனது அலைபேசியில் அழைத்து புகார் அளித்ததாகவும், காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.

பல்வேறு ஊடகங்களிலும் இதுகுறித்த  செய்திகள் வெளியாகி  விவாதங்களை ஏற்படுத்தியது.   இரு தினங்களில் (ஜூன் 22) 15 பேர் மீதும் போடப்பட்ட தேசதுரோக வழக்கை (இந்திய தண்டனை சட்டத்தின்  124-A பிரிவு) காவல்துறையினர் கைவிட்டனர். அதற்கு பதிலாக  சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்தல் (இந்திய தண்டனை சட்டத்தின் 153 (a) பிரிவு) என்ற குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிந்தனர்.

இந்த நிலையில், ,அதிரடி திருப்பமாக ஷாபுரா காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்பட்ட சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “ சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட தினத்தில், நான் அந்த ஊரிலேயே இல்லை.  வேறு ஒரு பிரச்சனை தொடர்பாக ஷாபுரா  காவல் நிலையத்தில் புகார் அளிக்க எனது தந்தையுடன் வந்திருந்தேன். அப்போது  சில போலீசார் எனது செல்போனை பிடுங்கி காவல்துறை எண்ணான 100-க்கு அழைத்து புகார் அளித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது இந்த குற்றச்சாட்டில் நம்பிக்கை இல்லையென்றால் இதுதொடர்பாக விசாரணை நடத்தலாம். , ஷாபுரா காவல்நிலையத்திற்கு அழைப்புவந்ததாக கூறப்பட்ட நேரத்தில் என்னுடைய செல்போன் எங்கிருந்தது என செல்போன் நெட்வொர்க் மூலம் ஆய்வு செய்தால் தொலைபேசி அழைப்பு காவல்நிலையத்திற்கு உள்ளிருந்து வந்த உண்மை வெளிவரும்” என்றும் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  15 பேர் மீதும் போலீசார் போலியாக வழக்கை ஜோடித்துள்ளது தெரியவந்துள்ளது.

பர்ஹான்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ சுபாஷின் குற்றச்சாட்டு குறித்து எனக்கு  எதுவும் தெரியாது. சுபாஷ், , எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தால்  இது குறித்து  விசாரணை நடத்தப்படும்”  என்று  கூறினார்.