பிக் பாஸ் 3வது சீசனின் முக்கிய போட்டியாளரான மதுமிதா தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். தற்கொலைக்கு முயற்சித்த அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பிக் பாஸ் நிர்வாகம் மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புகாரில், “நான் விஜய் டிவியின் சட்டத்துறை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஸ்வரி (எ) மதுமிதா, தன்னைக் காயப்படுத்திக் கொண்ட காரணத்தால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்படுவதற்கு முன்பு காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த 18 -ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் செல்லும்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றிருந்ததாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கான பணத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஒப்புக்கொண்டு சென்றவர், மறுநாள் 3.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம், ‘பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்’ என்றும், ‘நீங்கள் தரும்வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னை ஏமாற்றி விட்டீர்கள்’ என மிரட்டுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு தான் எந்தவித தற்கொலை மிரட்டலும் விடவில்லை. என் மீது விஜய் டிவி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறியுள்ளார் .

இந்த விவகாரத்தை விஜய் டிவி நிர்வாகமும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனும் பேசி தீர்வு காண வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மனதளவில் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன் ena கூறியுள்ளார் .