சென்னை: பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து நகரங்களில் சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. சமீப காலமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எண்ணை விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால், அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வரகிறது. இது சாமானிய மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2020ம் ஆண்டு  மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்மல் இருந்து வந்தது. பின்னர், கடந்தஆண்டு இறுதியில், சமையல் எரிவாயு உள்பட பெட்ரோல், டீசல் விலைகளும் உயரத் தொடங்கின.

கச்சா எண்ணை விலை உயர்வைத் தொடர்ந்து எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளன.

சமையல் எரிவாயு கடந்த ஆண்டு இறுதியில் இருமுறை உயர்த்தப்பட்டு, ரூ.710 ஆக விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. வணிக சிலிண்டரின் விலையை யூனிட்டுக்கு ரூ .184 உயர்த்தியுள்ளது.

டெல்லியில்,   சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ .719 ஆக (14.2 கிலோ), விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ .745.50 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில்  ரூ .719 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், தற்போது ரூ.710க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 உயர்ந்து, ரூ.735 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம், பெட்ரோல் இன்று பிப்ரவரி 4 ஆம் தேதி புதிய உயரத்தை எட்டி உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் 35 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ .86.65 ஆக உள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து ரூ .76.83 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில்  இன்று, பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.13 ரூபாய்க்கும், டீசல் விலையில் 33 காசுகள் உயர்ந்து 82.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.