சென்னை: எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள். அதனால் கணினி படியுங்கள் என நிகழ்ச்சியில் பேசிய  டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரிடமும்,  சைபர் குற்றவாளிகள் தனது கைவரிசையை செய்து வருகின்றனர். ஏராளமானோர் சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை எத்திராஜ் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்தும், சைபர் பாதுகாப்பு குறித்தும், சென்னையில் கருத்தரங்கு  நடைபெற்றது. இதில் திரளான மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, ‘நமது நாட்டில் சைபர் குற்றங்கள் என்பது தற்போது அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க போதுமான சைபர் கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் அதிக அளவில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைபடுவார்கள். அதனை நீங்கள் (மாணவர்கள்) தான் நிரப்ப வேண்டும், அதனால் கணினி படியுங்கள்  என கேட்டுக்கொண்டார்.

இந்த நவீன காலத்தில் ‘சைபர் கிரைம்’ மற்றும் ‘செக்யூரிட்டி’ குறித்து எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.இளைய தலைமுறை மாணவ-மாணவிகள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் 4 விதமான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்.அதில் உடல் மொழி முக்கியமானது. இணையம் உலகளாவிய புத்தகம் ஆகும். அதில் தேடினால் எல்லாம் கிடைக்கும். முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள். அப்படியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள்,மற்றும் தகவல்களை இழந்து விடுகிறார்கள்.

சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும். ‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான். அது குறித்து விழிப்புணர்வு மிக முக்கியம் தேவை. யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம். உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான்; உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது.

தமிழகத்தில் ‘காவல் உதவி’ என்ற ‘செயலி’யை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 விதமான வசதிகள் உங்களுக்காக உள்ளது. சீனாவில் அதிக ‘ஹேக்கர்கள்’ உள்ளனர். அதிகம் படித்தவர்கள் ‘இணைய’ குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவாற்றல் மிக்க, நன்கு பயிற்சி பெற்றவர்கள் தான் இதனை செய்கிறார்கள். நம்நாட்டிற்கு அதிக பயிற்சி பெற்ற கணினி மென்பொறியாளர்கள் தேவைப்படுகிறது.அதை நீங்கள் கற்றுக்கொண்டால் கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

‘ஹெலன் கெல்லர்’ பல அருமையான புத்தகம் எழுதினார். அவருக்கு கண் தெரியாது, காது கேட்காது, பேச முடியாது. வாழ்க்கை மிக பெரிய சாகசம் அது சாகசம் என்று நினைக்க வில்லை என்றால் வீண். உலகத்தில் மிக பெரிய பதவி என்பது படிப்பை விட வேறு கிடையாது. நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய சொத்து.இளமையில் நல்ல விசயங்கள் அனைத்தையும் கற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.