டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா அறிக்கை மற்றும் குஜராத் தொழிலதிபருக்கு திட்டம் ஒதுக்கியது தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு நடத்தனர்.
வக்ஃப் திருத்த மசோதா மீதான ஜேபிசி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம், அதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், அவை தலைவர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், வக்ஃப் திருத்த மசோதா மீதான ஜேபிசி அறிக்கை மீதான விவாதத்திற்கு இடையே எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
முன்னதாக இன்று காலை மக்களவை கூடியதும், கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். மேலும், குஜராத்தில் தொழிலதிபர் ஒருவருக்குத் திட்டத்தை ஒதுக்குவது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம் பிர்லா, நடவடிக்கைகளைச் சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவையின் மரபைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார். இந்த நிலையில், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியஅரசு தாக்கல் செய்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதுகுறித்து ஆராய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த மாதம் கூட்டுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டன.
மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த 655 பக்ககங்கள் கொண்ட அறிக்கைக்கு கூட்டுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழுவின் அறிக்கை இன்று காலை மக்களவை மற்றும் மாநிலக்ஙளவையில் தாக்கல் செய்யப்பட்டன, இதனை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்கப்பட்டதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.