டெல்லி: நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை குறைக்கும் மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்பிக்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி லோக் சபாவில் அறிமுகம் செய்தார்.

எம்பிக்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம் 2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, எம்பிக்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா 2020 அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனாவின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்க இந்த அவசர சட்டமானது ஏப்ரல் 6ம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஊதிய குறைப்பு மசோதா லோக்சபாவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.