டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி, முதல்கட்ட வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று 89 தொகுதிகளுக்கான 2வது கட்ட வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில்,  ஏற்கனவே முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 27ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. அதன்படி,   12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.