உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

19 வயது மதிக்கத்தக்க அந்த மூன்று பேரையும் புதனன்று இரவு பலமணி நேரம் மரத்தில் கட்டிவைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், வியாழனன்று காலை காவல் நிலையம் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தந்தை ஒருவர், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தினமும் இவ்வழியாக போகும் போதும் வரும்போதும் மாற்று மதத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் பெண்களை கையைப் பிடித்து இழுப்பதும் மானபங்கப்படுத்துவதுமாக பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று புகாரளித்துள்ளார்.

புகாரின் மீதான விசாரணையில் மூன்று இளைஞர்கள் மீதும் IPC பிரிவு 354 (பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது) 323 (காயப்படுத்துதல்) மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர்களும் தங்களை மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக அப்பகுதி மக்கள் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பினரிடமும் விசாரணை நடைபெறுவதாக மொராதாபாத் நகர மாவட்ட கண்காணிப்பாளர் அகிலேஷ் பதவ்ரியா தெரிவித்துள்ளார்.