சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் – வாக்குப்பெட்டிகள்  வைக்கப்படும் அறையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு அவசியம், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,  ஊரக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தலில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது – இதில் உரிய ஏற்பாடுகளை செய்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் – தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் எந்த புகாரும் எழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் – வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறையில் கடுமையான பாதுகாப்பும்,  இருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

9 மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.