சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு  மாநில தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் மாதம்  6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும்,   28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் காலியிடங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9-ந்தேதி நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 15ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வருகிற 22-ந்தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பல பகுதிகளில் ஊராட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட தமிழக மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி தண்டனைக்குரியது.

இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால், ஜனநயாகத்துக்கு ஊறுவிளைவிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதுடன் இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை என்பதை மக்கள் உணரச் செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.

ஊரக உள்ளாடசித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.