சென்னை

பிரதமர் மோடிக்கு ஆதிபுருஷ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி அனைத்தித்திய சினிமா தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவான “ஆதிபுருஷ்” எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகப் பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால் உலகம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.

திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்துப் பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. நாட்டில் பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி போராட்டம் நடைபெறுகிறது இது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் நடைபெற்றுள்ளது.

உடனடியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில்

“ஆதிபுருஷ் படத்தில் ராமர், அனுமனை விடியோ கேம் கதாபாத்திரம் போலச் சித்தரித்தும் அவதூறு செய்யும் வகையிலும் படத்தில் வசனம் இடம்பெற்றிருப்பது உலகத்தில் உள்ள இந்தியர்கள் மனதைப் புண்படுத்துகிறது. சனாதன தர்மத்தை அவமதிக்கு இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும். ஓடிடி தளங்களில் ஆதிபுருஷ் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்”

எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.