சென்னை: மத்திய அரசை எதிர்த்து டிசம்பர் மாதம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் உடனே தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தகவல் தெரிவியுங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து   அத்தியாவசிய உணவுப் பொருட் களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் மக்களிடையே முழுமையாக விலகாத நிலையில்,  அதிகரித்து வரும் விலைவாசி உயர்வும்  மக்களிடையே மத்திய பாஜக அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், பணவீக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் வரும் டிசம்பர் 12ம் தேதி டெல்லி ராம்லுலா மைதானத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. அதில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி பேரணியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூத்தி பவனுக்கு  தகவல் தெரிவியுங்கள் என அறிவித்து உள்ளார்.