டில்லி:

டில்லியில் நிர்வாக பொறுப்பை மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுக்கு இடையில் நிலவும் பிரச்னைக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மூலம் தீர்வு காண மாநில அரசு முறையீடு செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முறையீடு, காவிரி பிரச்னை விசாரணைக்கு பின் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி டில்லி நிர்வாகத்திற்கு கவர்னர் தான் தலைவர் என உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு மேல் முறையீடு செய்தது. டில்லியில் சட்டமன்றம் இருந்து அதிகாரம் அனைத்தும் கவர்னரின் கையில் உள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்கள் மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீத முள்ளவை மட்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இது போன்ற ஒரு பிரச்னையில் டில்லி சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.