ஸ்ரீநகர்:

தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிட பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பாஜகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகையாளர் பத்திரிகையாளர் மன்றத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.


லடாக் மக்களவை தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளரை விட 36 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

தங்களுக்கு ஆதரவாக செய்தி போடுமாறு, அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு கவரில் பணத்தை வைத்து பாஜகவினர் கொடுத்துள்ளனர்.
அதை பத்திரிக்கையாளர்கள் ஏற்கவில்லை. மேலும் பாஜகவினரின் செயலைக் கண்டித்தனர்.

பாஜகவின் செயலை கண்டித்து லே பத்திரிகையாளர் மன்றம், இது குறித்து போலீஸிலும் புகார் கொடுத்துள்ளது.

எனினும் இதுவரை போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஆன்வி லவாசாவிடமும் லே பகுதி பத்திரிகையாளர் பத்திரிகையாளர் மன்றத்தினர் புகார் கொடுத்தனர்.

புகார் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ஆன்வி லவாசா, புகாரை விசாரித்து தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்வோம் என்றார்.

இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் சேத்தி மறுத்துள்ளார். நாங்கள் பத்திரிக்கையாளர்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். யாருக்கும் லஞ்சம் கொடுத்துத்தான் கட்சிக்கு ஆதரவு தேட முடியும் என்று நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.