சென்னை

பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத் தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் அவர், தனது நெருங்கிய குடும்ப நண்பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை மருத்துவமனையில் சேர்க்கச் சென்ற போது எந்த ஒரு மருத்துவமனையிலும் படுக்கைகள் காலி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பலராலும் பரப்பப்பட்டு வைரலாகிறது.   இது மிகவும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.  தமிழக அரசு சார்பில் போதுமான படுக்கைகள் உள்ளதாகக்  கூறப்பட்டு வரும் வேளையில் இது போல வீடியோ வந்தது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இது குறித்து தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் விஜயபாஸ்கர், “பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார்.  சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5000 படுக்கைகள் உள்ளன.

ஆனால் அதை மறைத்து வரதராஜன் தவறாகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தற்போதுள்ள பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதால் அவர் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.