சென்னை:
வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த தமிழ்நாடு பார்கவுன்சில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழு எச்சரிகை விடுத்து உள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்டால் வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்படும் என மிரட்டியது.

ஆனால், வழக்கறிஞர் சட்ட விதிகளை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சொல்கின்றனர்.
வழக்கறிஞர் சட்ட விதிகளை பற்றி தங்களது கருத்துக்களை கூற ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு குழுவை தலைமை நீதிபதி நியமித்தார். இந்த குழுவில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ராஜீவ்ஷக்தேர், எம்.எம்.சுந்தரேஷ், பி.என்.பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். இந்த ஆய்வுக்குழுவின் கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது.
இவர்களுடன் வழக்ககறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆலோசனைக் கூட்டம் 29ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வுக்குழுவில் எந்தவித முடிவும் எட்டாததால், திட்டமிட்டபடி 25ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் கூறினார்.
ஏற்கனவே அறிவித்தபடி வரும் திங்கட்கிழமை (25ந்தேதி) ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெறும். இதில் தமிழக அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று சங்க நிர்வாகிகள் கூறினர்.
Patrikai.com official YouTube Channel