டெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க  முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந் நிலையில், நீதித்துறை விமர்சனங்கள் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பொதுநல வழக்குகளை பதிவு செய்தல், தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வது, நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ், அவர்களின் வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் அரசியல் குற்றச்சாட்டுகள் சுதந்திரமான நீதித்துறை மீது விழுந்த கறைகளாக இருக்கின்றன.

இதுபோ ன்ற மனப்போக்கு அண்மைக்காலமாக நீதித்துறை சுதந்திரத்துக்கு வந்த மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நீதித்துறை சுதந்திரத்தை மீட்டெடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.