கடலூர்: தி.மு.க., பிரமுகர் இளையராஜா மீது முன் விரோதம் காரணமாக சரமாரி துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமீக காலமாக தமிழ்நாட்டில், அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, போதைப்பொருள், சாதிய வன்முறை போன்ற  சம்பவங்களால்  சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது. போக்குவரத்த விதிமீறல் என அபராதத்தை வசூலிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறையினர், சட்டம் ஒழுங்கு பராமரிப்பை கோட்டை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., தியாகராஜன் மகன் இளையராஜா, 45 வயதான இளையராஜலா தற்போது தி.மு.க.வில் இருந்து வருகிறார்.  மேலும்,   விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் இல்லம் நடத்துகிறார். இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.

இளையராஜா தன் நிலத்தில் வேளாண் துறை அலுவலர் ஒருவருடன் கூட்டம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு மூன்று பைக்குகளில் ஆறு பேர் வந்தனர். இளையராஜாவை நோக்கி ஓடி வந்த அவர்களில் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளையராஜாவை சுட்டார்.   அந்த கும்பல் சுட்டதில் இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். முதல்கட்டமாக,  கடலூரில்  இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து,   உரிமம் இல்லாத 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.