டில்லி:

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்குள் ஏற்பட்ட மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.

தற்போது தேர்தல் ஆணையர்களுல் ஒருவராக உள்ள முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவசாவின் கருத்துக்கள் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர்களால் புறக்கணிக்கப்பட்டதால், இனிமேல் தேர்தல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தலைமை தேர்தல்ஆணையருக்கு லவசா கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. ஆனால், விதிகளை மீறி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்பட பலர், புல்வாமா, பாலகோட் தாக்குதல்கள் குறித்து பேசி வந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஏராளமான புகார்கள் அளித்தன.

ஆனால், புகார்களின் மீது தேர்தல் ஆணையம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால், உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது. இவர்கள் இருவரும் மீதும் 8 க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இதில் 6 வழக்குகள் மீது ஏற்கனவே தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவித்தது. மேலும் ஏராளமான புகார்களை தள்ளுபடி செய்து உள்ளது.

பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து மோடி மீது புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் மோடி மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

எதிர்க்கட்சியினரின் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் 3 பேர்  விசாரணை நடத்தினர்.  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அதிகாரிகள் அசோக் லவசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோரை விசாரணை நடத்தினார்கள். இதில் இரண்டு அதிகாரிகள் மோடி மீது தவறு இல்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆனால் அசோக் லவசா மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல் அமித்ஷாவிற்கு எதிரான அனைத்து புகாரிலும் அசோக் லவசா அவருக்கு எதிராகவே கருத்து கூறியிருந்தார்.

ஆனால், தலைமை தேர்தல்ஆணையர் அரோரா லவசாவின் கருத்துக்களை ஏற்கவில்லை. மோடிக்கும், அமித்ஷா வுக்கும் ஆதரவாகவே அவர்களது தீர்ப்பு அமைந்து வருகிறது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை  இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.

அதில், மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறைகளை மீறினர். அவர்கள் மீதான 6 புகார்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. அதனால் இனி தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று கூறி உள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக இருந்தது இதன் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.