னிஸ்வர பகவான் அரூபி வடிவத்தில் சுயம்பு லிங்கமாக பூமியிலிருந்து வளர்ந்து கொண்டேயிருந்தார். அவருக்கு மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலின் தலமரம் விடத்தை மரம். தலமலர் கருங்குவளை மலர் தல இலை வன்னி இலை. வாகனம் காகம். தானியம் எள். திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான் முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும் நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை தலமரம் உள்ளது. நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் இக்கோவிலில் நடைபெறுகிறது. தினந்தோறும் பூஜை முடிந்த பின் பிரசாதம் முதலில் காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு பிராதத்தை வைப்பார்கள். பிராதத்தை காகம் உண்டபின் தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

குச்சனூர் பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினந்தோறும் இறைவனிடம் வேண்டி வந்தான். ஒரு நாள் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான். இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளாகி மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

சந்திரவதனன் வழிபாட்டில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவரவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும் தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உனது தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடித்திருக்கிறார். அவரின் பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன என்றார். சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிறங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங் களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன் என்று சொல்லி மறைந்தார். சந்திரவதனனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு சுயம்புவாகத் தோன்றினார். சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் சனி பகவானால் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த செண்பக நல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன் பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது. தினகரன் மான்மியம் என்கிற பழமையான நூலில் இந்த தலத்திற்கான புராண வரலாறு உள்ளது. தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.