லார்ட்ஸ்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் ஜேஸன் ராய்க்கு தவறாக அவுட் கொடுத்த நடுவரான குமார் தர்மசேனாதான், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டிக்கும் நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் போட்ட பந்தில், 85 ரன்களை எடுத்திருந்த ராய்க்கு, கீப்பர் கேட்ச் முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டிலேயே படவில்லை என்பது ரீ-பிளேயில் நன்றாக தெரிந்தது. ஆனால், அவுட் கொடுக்கப்பட்டதற்கு ராய் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, தான் கொடுத்த அவுட் மீது திருப்தி இல்லையென்றால் ‘ரிவ்யூ’ செய்துகொள்ளலாம் என்று நடுவர் சொன்னதும் சர்ச்சையானது.

ஏனெனில், அதற்கு முன்னர்தான் இன்னொரு இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ தனது அணிக்கான ரிவ்யூவை பயன்படுத்தி வீணாக்கியிருந்தார். ஆனால், அதைக்கூட நினைவில் கொள்ளாமல் குமார் தர்மசேனா இவ்வாறு கூறியதுதான் சர்ச்சைக்கு காரணம்.

ஆனால், இந்த விஷயத்தில் ராய் நடந்துகொண்ட விதத்தால் அவருக்கு 2 ஒழுங்கீனப் புள்ளிகள் கிடைத்தன. மேலும், அந்த ஆட்டத்தின் ஊதியத்திலிருந்து 30% அபராதமாக விதிக்கப்பட்டது. ராய் இன்னும் 1 ஒழுங்கீனப் புள்ளியைக் கூடுதலாகப் பெற்றிருந்தால், அவர் இறுதிப்போட்டியில் ஆடமுடியாமல் தடைவிதிக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 ஒழுங்கீனப் புள்ளியைப் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்படும்.