சென்னை: காசி சங்கமம் நிகழ்ச்சி நாளை 4வது ஆண்டாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்குச் செல்கின்றன.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி  நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. முதன் முறையாக கடந்த 2022ம் ஆண்டு,  நவம்பர் 16ந்தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் நவம்பர் 17ந்தேதி முதல் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. இதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 4வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2ந்தேதி  (நாளை) தொடங்கி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த விழாவின் முதல் கட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை விருந்தினராகவும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சகத்தின் (உயர்கல்வித் துறை) இணைச் செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால், இந்த ஆண்டிற்கான காசி தமிழ் சங்கமத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உள்ளது.

 இந்த முறை காசி தமிழ் சங்கமம் 4.0 இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று கோவிந்த் ஜெய்ஸ்வால் விளக்கினார்:

முதல் கட்டம்: வாரணாசியில் (காசி) டிசம்பர் 2 முதல் 15 வரை நடைபெறும். இதில் தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தரவுள்ளன.

2-ம் கட்டம்: தமிழ்நாட்டில் டிச.15 முதல் 31 வரை நடைபெறும். இதில் வாரணாசியில் இருந்து சுமார் 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வார்கள். கூடுதலாக, பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர் என்பது இந்த ஆண்டின் சிறப்பம்சமாகும்.

தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…