கொல்கத்தா

மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு வங்க அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு ல் நடந்தது. அதில் 24,640 காலி பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 25,753 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இந்த தேர்வு விதிமுறைப்படி நடக்கவில்லை, முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உட்பட 6 பேரைக் கைது செய்தது. வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசக் மற்றும் முகமது ஷபீர் ரஷீதி அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசக், முகமது ஷபீர் அமர்வு அளித்த தீர்ப்பில்,

‘‘ஆசிரியர்கள் தேர்வில் சட்ட விரோதமாக ஆட்சேர்ப்பு நடந்துள்ளது. பல முறைகேடுகள் நடந்துள்ளதால் அது செல்லாது. சட்டவிரோதமாக நியமனம் பெற்றவர்கள் இதுவரை பெற்ற சம்பளத் தொகை, இதர சலுகைகள் உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அரசுக்கு 4 வாரத்துக்குள் திரும்பச் செலுத்த வேண்டும். மேலும், ஆசிரியர் நியமன முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிடுகிறோம். “

எனக் கூறினர்.