கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.  நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார் என்பதை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்துவந்த  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டு  ஆகஸ்ட் 9 அன்று இரவு பணியில் இருந்தபோது பெண் பயிற்சி மருத்துவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவத்தில் ஒரு கும்பலே ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருப்பதாக  தகவல்கள் தெரிவித்தன. மேலும், இந்த விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குறிப்பிட்ட மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் (33) இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கொலை நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தியது. ஒட்டுமொத்த விசாரணையில் சஞ்சய் ராயை ஒரே பிரதான குற்றவாளியாகக் குறிப்பிட்டுள்ள சிபிஐ அவர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

மேலும் இந்த கொலை சம்பவம் தொட்ர்பாக,  ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோர் சாட்சிகளை அழிக்கவும், மாற்றியமைக்கவும் செய்ததாகக் கூறி சிபிஐ அவர்களைக் கைது செய்திருந்தது. ஆனால், அவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தவறியதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றத்தில் சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பிக்கும் முறை 2024ம் ஆண்டு  நவ. 4  அன்று முடிந்தது, பின்னர், நவ. 11 முதல் விசாரணை தொடங்கியது. மொத்த விசாரணையும் மூடிய நீதிமன்ற அறைக்குள் கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ​​பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சிபிஐ, கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட மருத்துவருடன் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட மொத்தம் 50 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.