டில்லி

ன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தை அமைதியாக நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேளாண் போராட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் நடத்தும்  போராட்டங்கள் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இதற்காக நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.   அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பிடிவாதமாக உள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஒரு பகுதியாக இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.  இந்த போராட்டம் குறித்து பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர உள்ளிட்டோர் நேற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளனர்.   இந்த போராட்டத்தை ஒட்டி ரயில்வே துறை 20 ஆயுதக் காவல் படை குழுக்களைப் பாதுகாப்புக்கு அமர்த்தி உள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்னும் விவசாயிகள் சங்க செய்தி தொடர்பாளர் ஜக்தார் சிங் பாஜ்வா, “இன்று நடைபெற உள்ள 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை அமைதியாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.   இந்த போராட்டத்தால் துயருறும் பயணிகளுக்கு நாங்கள் உணவுகள் வழங்க உள்ளோம்.

எங்கள் அமைப்பின் கீழ் தற்போது 40 விவசாயச் சங்கங்கள் இணைந்துள்ளன.  அந்த சங்க உறுப்பினர்கள் அனைவரையும் இந்த போராட்டம் அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.   அரசு நமது கோரிக்கையை ஏற்காதது மட்டுமே நமது பிரச்சினையே தவிர மக்களிடம் நமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.  எனவே நமது  போராட்டங்களை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.