புதுடெல்லி:
ணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக மக்களவையில் நடந்து வருகிறது

இன்று மத்திய அரசுக்கு மீதான 2-ம் நாள் விவாவத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். பதவி நீக்கம் ரத்துக்குப்பின் ராகுல் காந்தி முதன்முறையாக இன்று அவையில் உரையாற்றினார். அதில்,

எம்.பி தகுதி நீக்கத்தை ரத்து செய்த சபாநாயகருக்கு நன்றி. இன்று நான் மணிப்பூர் பற்றியே பேசுவேன். அதானி பற்றி நான் பேச மாட்டேன். ஆகவே பாஜக-வினர் அச்சப்பட வேண்டாம். நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நான் என் மனதில் இருந்துதான் பேசுகிறேன். இதயத்தில் இருந்துவரும் வார்த்தைகள், இதயத்திற்கே செல்லும்.

நான் 130 நாட்கள் ‘ஒற்றுமை இந்தியா’ என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டேன். இந்த யாத்திரை என்னை மாற்றியது. யாத்திரை சென்றபோது என்ன லட்சியத்திற்காக செல்கின்றீர்கள் என மக்கள் என்னிடம் கேட்டார்கள். அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பின்னர் புரிந்துகொண்டேன். நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். அவர்களின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. என்னுடைய இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்னும் நிறைவடையவில்லை.

பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார். தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? இந்தியாவின் ஒருபகுதியாக, ஒரு மாநிலமாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. மத்திய அரசு, தனது செயல்களால் இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்துவிட்டீர்கள்.

ஒரு தாய் இங்கே இருக்கிறார்; மற்றொரு தாய் மணிப்பூரில் இருக்கிறார். அவரை கொன்றுவிட்டீர்கள். ஆம், பாரத மாதாவையே கொன்றுவீட்டீர்கள். மணிப்பூரை போலவே, இந்தியாவையும் கொலை செய்துவிட்டீர்கள். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் பேசவில்லை.

மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடமும் நான் பேசினேன். அவர்களின் கதை கொடூரமானது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரேநாளில் அமைதியை கொண்டுவரலாம்.

ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். மோடியும், அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார். அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை” என்றார்.