டில்லி

பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் கார்கே அமைச்சர் அமித்ஷாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது.    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக உள்ளது. கட்சி வேறுபாடு தாண்டி அனைவரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள பதில் கடிதத்தில்,

” பிரதமர் எதிர்க்கட்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்களுடனும், பயங்கர  வாதிகளுடனும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ஆனால் உள்துறை அமைச்சராகிய நீங்கள் எதி ர்க்கட்சியினருக்கு உணர்வுப்பூர்வமான கடிதம் எழுதி, ஆக்கப்பூர்வமான பதிலை எதிர்பார்க்கிறீர்கள்       .

எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே பல ஆண்டுகளாகவே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அந்த இடைவெளி, தற்போது ஆளுங்கட்சிக்கு உள்ளேயே தோன்றத் தொடங்கியுள்ளது. பிரதமர் எதிர்க்கட்சிகள் திக்கற்றுச் செயல்படுகின்றன என்று கூறியிருப்பது அபத்தமானது மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமானதும் கூட.

உங்கள் கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் தொடர்பான வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகிறபடி நாடாளுமன்றத்துக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதைப் பிரதமர் மோடி தனது கவுரவத்துக்கு இழுக்காக கருதுகிறார்.

உங்கள் கடிதத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதை விட உங்களின் நடத்தையின் மூலம் மட்டுமே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.  எனவே அவை அலுவல்கள் சீராக நடைபெற அரசு விரும்பினால், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுப்ப வாய்ப்பளிக்க வேண்டும் ”

என்று கூறியுள்ளார்.