பெங்களூரு,

கே.ஜி.ஹள்ளி பகுதியில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்த விசாரணையில் கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு  நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்த விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருமணத்தை நிறுத்துவதற்காக கள்ளக்காதல் ஜோடிகள்  இணைந்து, இந்த நாடகத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது,

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் அதிகாலையில் வேலைக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை யடுத்து, அந்த இளம்பெண் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடிவந்தார்கள்.

இதனால் அந்த மர்மநபர், அந்த பெண்ணை தாக்கியதுடன், அவரை உதட்டை கடித்துவிட்டு தப்பி விட்டார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்த்தபோது, அந்த இளம்பெண்ணை ஒருவர் பின்தொடர்வது மட்டுமே தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அந்த இளம்பெண்ணும், பின்தொடருபவர் அவரது கள்ளக்காதலன் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

போலீசாரின் அதிரடி விசாரணையில் இர்ஷத் கான்( வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

புகார் கூறிய இளம்பெண்ணும், இர்ஷத்கான் இருவரும் சேர்ந்தே இந்த நிகழ்வை அரங்கேற்றி உள்ளார்கள். புகார் கூறிய பெண்ணின் சகோதரிக்கும் இர்ஷத்கானுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் புகார் கொடுத்த இளம்பெண்ணின் அக்கா கணவரான இர்ஷத்கான் மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதற்கிடையில் புகார் கூறிய பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து உள்ளனர். அதை விரும்பாத அந்த இளம்பெண், தனது திருமணத்தை தடுத்து நிறுத்த, தனது அக்கா கணவருடன் சேர்ந்து இந்த நாடகத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த இளம்பெண், தனது அக்கா கணவர்)வுடன் போனில் உரையாடிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. இருவரும் காதல் ரசம் கொட்டி கொஞ்சியதும் தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டிலேயே இருந்துகொண்டே, கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 30ந்தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெங்களூருவில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவத்தை பார்த்து இருவரும் இவ்வாறு திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறினர்.