அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பின பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த பிப்ரவரி 25 ம் தேதி அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்தார்.

அதிபர் பைடன் தேர்வை அடுத்து அமெரிக்க செனட் சபை அங்கீகாரத்திற்காக இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது, இதில் நீதிபதி ஜாக்சனை ஆதரித்து 53 வாக்குகளும் எதிர்த்து 47 வாக்குகளும் கிடைத்தது.

செனட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் 116 வது நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் முதல் கறுப்பினப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது அமெரிக்க வரலாற்றில் முக்கிய தருணம். அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்திலும் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. நீதிபதி ஜாக்சன் சிறந்த நீதியரசராக விளங்குவார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவருடன் பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை, 115 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி உள்ள நிலையில் அவர்களில் இருவர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அதிலும் ஆண் நீதிபதிகள்.

2020 ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது கருப்பின பெண் ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்த பைடன் தற்போது அதை நிறைவேற்றியதுடன் அமெரிக்க உச்சநீதிமன்ற வரலாற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஹார்வார்ட் சட்டக் கல்லூரியில் பயின்ற 51 வயதாகும் கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் தற்போது அமெரிக்க ஒன்றிய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் 6வது பெண் நீதிபதி என்பதும் தற்போது இந்த குழுவில் இவருடன் சேர்த்து மேலும் 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீதிபதி கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது ராஜினாமா செய்யும் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.