திருவனந்தபுரம்: ராஜஸ்தானில் இருந்து 12சிறுமிகளை ரயிலில் கடத்தி வந்தது தொடர்பாக கேரள கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் வர்கீஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிரியாரின் முறை கேடான செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ஓக்காவில் இருந்து கடந்த 26ம் தேதி எர்ணாகுளம் நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை அடைந்தது. ரயிலில் 8 வயது முதல் 18 வயதிலான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர். அவர்களுடன் 4 பெரியவர்களும் இருந்தனர். குழந்தைகள் மவுனமாக இருந்ததும், அவர்களுடன் வந்தவர்கள் அந்த சிறுமிகளை கண்களாலேயே மிரட்டி வந்ததும், ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் விசாரித்தபோது முறையான பதில் கூறவில்லை.

இதுதொடர்பாக ரயில் பயணிகள் கோழிக்கோடு ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  இதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், அந்த சிறுமிகளையும், அவர்களுடன் பயணம் செய்த பாதிரியார் ஜேக்கப்பர் உள்பட மற்றவர்களையும் கைது செய்தனர்.

சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை  எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரில் உள்ள கருணா பவன்  ஒரு தனியார் ஆதரவற்றோர்  காப்பகத்திற்கு  அனுமதியின்றி அழைத்து செல்வது தெரியவந்தது. சிறுமிகளை அழைத்து வந்தவர்களில் 2 பேர் பெற்றோர் என்பதும்,  2 பேர் சிறுமிகளை கடத்தும் புரோக்கர்கள் என்பதும் தெரிந்தது. புரோக்கர்கள்  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லோகேஷ் குமார், ஷியாம் லால் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த பெரும்பாவூரில் உள்ள கருணா பவன்  காப்பகத்தை பாஸ்டரான ஜேக்கப் வர்கீஸ் நடத்தி வருகிறார். அவரது ஆலோசனையில் பேரில்தான் சிறுமிகள் கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்த  பாஸ்டர் ஜேக்கப் வர்கீசையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் காப்பகத்தில் உள்ள மற்றவர்களிடம் விசாரணை நடத்தவும்,  இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், பாஸ்டர் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்