திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கேரளாவை ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாநிலத்தின் பெயரான கேரளா என்பதை ‛கேரளம்’ என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல்சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‛கேரளம்’ என மாற்றம் செய்ய மாநில அரசு விரும்பியது.

இதற்காக கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது.

முன்னதாக நேற்று பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது கேரள சட்டமன்ற கூட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.