திருவனந்தபுரம்

கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகள் எரிப்பு விவகாரத்தில் ஐஜி விஜயனைப் பணி நீக்கம் செய்து டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் கேரளாவில் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுவண்டி ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.  உயிருக்குப் பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டில்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

ஷாருக் செய்பிக்கு சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ.வும் விசாரணையைத் தொடங்கியது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விவரங்களை மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டு இருந்தது.

ஆயினும் ஷாருக் செய்பி கைது செய்யப்பட்டது, அவரை போலீசார் கேரளாவுக்குக் கொண்டு வருவது குறித்த விவரங்கள் உடனுக்குடன் வெளியானது. மேலும் ரத்தினகிரியில் இருந்து ஷாருக் செய்பியை கேரளாவுக்குக் கொண்டு வரும் போது 2 காவல்துறை வாகனத்தில் 2 முறை பழுது ஏற்பட்டது.

இது குறித்த படங்களும், விவரங்களும் பத்திரிகைகளில் வெளியானது. இந்த ரகசிய விவரங்கள் வெளியானது குறித்து விசாரணை நடத்த கேரள டி.ஜி.பி. அனில்காந்த் உத்தர விட்டார்.  விசாரணையில் கேரள தீவிரவாத தடுப்புப் படை ஐ.ஜி.யாக இருந்த விஜயன்தான் முக்கிய தகவல்கள் வெளியாகக் காரணம் என்பது தெரியவந்தது.

உடனடியாக ஐ.ஜி. விஜயன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரிகளை ஐ.ஜி. விஜயன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. டி.ஜி.பி. அனில்காந்துக்கு இவ்விவரம் தெரியவந்தது.  எனவே ஐ.ஜி. விஜயனை டி.ஜி.பி. அனில்காந்த் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.